
கோச்செங்கட்சோழர் ஆலயம் அமைப்போம் திட்டம்
திருநாவலூரில் நம்பி ஆரூரர் பெருமான் திருப்பணிகள் நடைபெற்று வந்த சமயம், ஒரு நிகழ்வின் பொழுது அன்பர் ஒருவர் விழுப்புரம் புறவழிச்சாலை அருகே வழுதரெட்டியில் பெருமானின் திருமேனி, அம்மை மற்றும் சுற்றுத்தெய்வங்களின் திருமேனிகள் வெட்டவெளியில் இருப்பதாகக் கூறினார். ஆலயம் கட்டுவதற்காக முயற்சி மேற்கொண்டு மணல் வாங்க இயலாமல் பணிகள் தொய்வுற்று கிடப்பதைப் பற்றியும் கூறி வருந்தினார்.
குருவருளும் திருவருளும் கூட்டுவிக்க இதைப்பற்றி நாம் நம் குழுவில் கலந்துரையாடிக்கொண்டிருக்க, வேறொரு அன்பர், இது போன்ற நிலையில் பல ஆலயங்கள் உள்ளன என்றும் அவற்றின் புகைப்படங்களையும் காண்பித்தார்.
பின்னர் நம் குழும அன்பர்களோடு வழுதரெட்டி சென்று பார்த்தபோழ்து, அந்த ஆலயத்தின் நிலை எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. அதுவரை நடந்திருந்த அத்திருப்பணியை ஒரு அம்மையார் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து செய்கிறார் என்று அறிந்து அவரிடம் பேசினோம்.
அந்த இளம்வயதில் அவர்களுடைய பத்தியும், திருத்தொண்டின் மேல் இருந்த உறைப்பும், இறைவர் மேல் அவர்கள் கொண்டிருந்த அளவில்லா அன்பையும் எண்ணி மனம் நெகிழ்ந்தது. அவர்களின் எளிமையான வாழ்க்கைச் சூழலிலும் அவர்கள் செய்யும் பணி ‘அன்பின் பணி’ என்பதையுணர்ந்த நாம், ‘இதுகாறும் நாம் நம் தலைவருக்காக என்ன செய்தோம்?’ என்று நம்முள்ளே எழுந்த கேள்விக்கு விடையறியாமல் தவித்தோம்.
அதைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் போழுது அரன்பணி அறக்கட்டளையை குறித்த நினைவு வந்தது. அரன்பணி அறக்கட்டளை என்பது திருமுறைகளைக் கண்டெடுத்து சைவத்திற்கு பெரும் தொண்டாற்றிய நந்தம் மன்னர் இராச இராச சோழருக்காக ஒரு நினைவிடம் கட்ட வேண்டும் என்ற அவாவின் முகத்தானாக அடியார் பெருமக்களால் உருவாக்கப்பட்டதாகும்.
குருவருளும் திருவருளும் உணர்த்த இதுபோன்ற நிலையில் உள்ள தலங்களில் அரன்பணி அறக்கட்டளை வாயிலாக புதிய ஆலயங்களை அமைத்தலும், பழுதடைந்த நிலையிலுள்ள ஆலயங்களின் பழைமை தன்மை மாறாமல் புணரமைத்தலும் செய்யலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று முதல் பல்வேறு ஆலயப் பணிகளை நான்கு வகையான திட்டங்களைத் தீட்டி அரன்பணி அறக்கட்டளை செய்துவருகிறது.
இப்பணியில் அடியார் பெருமக்களும், நல்லறம் பேணுபவர்களும், அனைத்து நிலையிலிருக்கும் மக்களும் பங்கேற்கும் விதமாக மாதம் நூறு ரூபாய் என்ற அளவிலே நன்கொடைப்பெற்று பல்வேறு ஆலயப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.